கவலைப்படும் கண்ணனைப் பற்றிய கவிதை
அடுத்து யார் இல்லம் நுழைவதென்று−
ஐயா, எனக்கொன்னும் புரியலயே;
எடுத்து வெண்ணையை உண்பதற்கே−
எனக்கோ, ஆசை கொறயலயே!
பக்கத்துவீட்டு பாலாவோ−
பானையை பதுக்கி வெச்சிருக்கா;
பத்துப் பூட்டு போட்டு அதன்−
சாவியை தலைப்பில முடிஞ்சிருக்கா!
எதிர் வீட்டு இளவரசி−
எரவாணத்தில், மறச்சு ஒளிச்சிருக்கா;
ஏனோ அதுக்குக் காவலென்று−
அதுக்குக் கீழயே படுத்திருக்கா!
கோடியாத்து கோபாலி−
குழியில பானைய எறக்கிருக்கா;
குழிக்கு காவலா கணவனையே,
கழியோட ஒக்காரச் சொல்லிருக்கா!
நாலாம் ஆத்து நந்தாவோ−
வேலியே போட்டு மூடிருக்கா;
நானும் அங்க போனாக்க−
தோல உறிச்சே போட்டுடுவா!
இப்படியெல்லாம் செஞ்சாக்க−நான்
எப்படி இங்க இருக்கறதாம்?
முப்படி வெண்ணை தினம் வேணும்−இனி
எப்படி காலம் தள்ளறதாம்?
பச்சை பிள்ளை நானென்றா,
பலரும் என்னை ஏய்க்கின்றார்!
இச்சைப்படி நான் செய்யணுமே−இப்ப,
யார் என் உதவிக்கு வருகின்றார்?..
– கிருஷ்ணனைப் பற்றிய சுவாரஸ்யமான கவிதை by Smt Padma Gopal ji.
Picture courtesy Shri Nirukurthy Srinivas.
Published in My Little Krishna