வாரணமாயிரம் பாடல் (Video – duration 5 mins) 4


 வாரணமாயிரம் சூழவலஞ்செய்து *
நாரண நம்பி நடக்கின்றானென்றுஎதிர் *
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் *
தோரணம் நாட்ட கனாக்கண்டேன் தோழீ! நான். 1

 நாளை வதுவை மணமென்று நாளிட்டு *
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ் *
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர் *
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீ! நான். 2

 இந்திரனுள்ளிட்ட தேவர்குழாம்எல்லாம் *
வந்திருந்துஎன்னை மகட்பேசி மந்திரித்து *
மந்திரக் கோடியுடுத்தி மணமாலை *
அந்தரிசூட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான். 3

 நால்திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி *
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெடுத்தேத்தி *
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னை *
காப்புநாண் கட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான். 4

 கதிரொளி தீபம் கலசமுடனேந்தி *
சதிரிள மங்கையர்தாம் வந்து எதிர்கொள்ள *
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும் *
அதிர புகுதக் கனாக்கண்டேன் தோழீ! நான். 5

 மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத *
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ் *
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்துஎன்னை *
கைத்தலம் பற்ற கனாக்கண்டேன் தோழீ! நான். 6

 வாய்நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால் *
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து *
காய்சினமாகளிறன்னான் என்கைப்பற்றி *
தீவலஞ்செய்ய கனாக்கண்டேன் தோழீ! நான். 7

 இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் *
நம்மையுடையவன் நாராயணன் நம்பி *
செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி *
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீ! நான். 8

வரிசிலை வாள்முகத்து என்னைமார்தாம் வந்திட்டு *
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி *
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என்கை வைத்து *
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான். 9

 குங்குமம்அப்பிக் குளிர்ச்சாந்தம்அட்டித்து *
மங்கலவீதி வலஞ்செய்து மணநீர் *
அங்கு அவனோடும் உடன்சென்று அங்கு ஆனைமேல் * மஞ்சனமாட்ட கனாக்கண்டேன் தோழீ! நான். 10

 ஆயனுக்காக தான் கண்ட கனாவினை *
வேயர்புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல் *
தூய தமிழ் மாலை ஈரைந்து வல்லவர் *
வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே! 11

ஸ்ரீ ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி:  6.1 – 6.11

 ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருவடிகளே சரணம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

4 thoughts on “வாரணமாயிரம் பாடல் (Video – duration 5 mins)