விழிகள் உறக்கி வட்டில் வேண்டிய விமலன்


ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 5 – லீலாசுகர் அருளிச்செய்தது

பாலையும் தயிரையும் உண்ட கண்ணனுக்கு வெண்ணெய் தின்ன ஆவல். அவன் யசோதாவை அழைக்கின்றான்.

யசோதை: “எதற்குக் கூப்பிட்டாயடா, கண்ணா?”

கிருஷ்ணன்: “எனக்கொரு பாத்திரம் வேண்டும்”

யசோதை:’எதற்கடா, பாத்திரம்?’

கிருஷ்ணன்: ‘பால் நிரப்பிப் பருகவேண்டும்’ (வேறு எதற்கு? வெண்ணெய் திருடத்தான்!)

யசோதை:’பாலெல்லாம் இப்போது அருந்தக் கூடாது, இராத்திரிதான், பால்’

கிருஷ்ணன்:’இராத்திரி என்றால் என்ன, அம்மா?’

யசோதை: ‘இருட்டு, தெரியுமில்லையா? ஒன்றும் தெரியாதிருக்கும் அந்த இருட்டுதான் இராத்திரி’

கண்ணை இறுக்க மூடிக் கொண்ட கண்ணன்.

“இதோ, இராத்திரி வந்துவிட்டதே, எனக்கு இப்போது ஒன்றுமே தெரியவில்லை. எனக்கு இப்போது வட்டில் கொடு அம்மா!” என்றான் கண்ணன்!

இப்படி கண்களைப் பொத்திக் கொண்டு “ராத்திரி வந்தாச்சு, குடும்மா குடு” என அன்னையின் முந்தானையை இழுக்கும் கண்ணன் அவன் நம்மைக் காத்திடுக!

'எற்றுக் கழைக்கும் நீ கண்ணா!'
'எனக்கொரு வட்டில் நல்குதி;'
'எற்றுக் கியம்புவாய் வட்டில்?';
'இனியபால் இட்டு அருந்தவே';
'இற்றைக் கருந்தலேல்; இரவே'
'இரவெதோ? அம்மா!'; 'இருட்டதே'.
'உற்ற திரவுகொல்;' விழிகள்
உறக்கினான் வட்டில் வேண்டியே!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *