ஸ்ரீமதே இராமாநுஜாய நம:
ஸ்ரீ பெரியாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ஸ்வாதி (ஆனி மாதம்)
நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற்று பத்தொன்றும் நமக்கு உரைத்தான் வாழியே
சொல்லரிய வானிதனில் சோதி வந்தான் வாழியே
தொடை சூடிக்கொடுத்தவள் தன் தொழும்அப்பன் வாழியே
செல்வநம்பி தனைப்போலச் சிறப்புற்றான் வாழியே
சென்று கிழியறுத்து மால் தெய்வம்என்றான் வாழியே
வில்லிபுத்தூர் நகரத்தை விளங்க வைத்தான் வாழியே
வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே
ஸ்ரீ பெரியதிருமலை நம்பி வாழித்திருநாமம்
திருநக்ஷத்ரம்: ஸ்வாதி (வைகாசி மாதம்)
வைகாசிச் சோதிநாள் வந்துதித்தான் வாழியே
வண் திருவேங்கடமுடையான் வரபுத்திரன் வாழியே
அய்யன் ஸ்ரீ ஆளவந்தார் அடிதொழுவோன் வாழியே
அனவரதம் மலைகுனியர்க்கு அடிமை செய்வோன் வாழியே
மெய்யன் இராமானுசாரியன் விரும்புமவன் வாழியே
மிக்க திருமலையார்க்கெல்லாம் மேலாவான் வாழியே
செய்யதமிழ் வேதத்தின் சிறப்புஅறிந்தோன் வாழியே
திருமலை நம்பிகள் உபயதிருவடிகள் வாழியே
ஸ்ரீ வடக்குத்திருவீதிப்பிள்ளை வாழித்திருநாமம்
திருநக்ஷத்ரம்: ஸ்வாதி (ஆனி மாதம்)
ஆனிதனில் சோதிநாள் அவதரித்தான் வாழியே
ஆழ்வார்கள் கலைப்பொருளை ஆய்ந்துரைத்தோன் வாழியே
தான்உகந்த நம்பிள்ளை தாள் தொழுவோன் வாழியே
சடகோபன் தமிழ்க்கீடு சாற்றினான் வாழியே
நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே
நல்ல உலகாரியனை நமக்குஅளித்தான் வாழியே
ஈனமற எமையாளும் இறைவனார் வாழியே
எங்கள் வடவீதிப்பிள்ளை இணையடிகள் வாழியே